உன்னைக் கண்டேன் பெண்ணே


கர்நாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு  மிகவும் அதிகம். எவ்வளவு அதிகம் என்றால், நான் நுழைந்து அதை அவமரியாதை செய்யக் கூடாது - என்ற அளவுக்கு அதிகம்.

எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது, முதல் முறையாக நானும் என் தங்கையும் "பாட்டு  க்லாஸ்" சென்ற ஞாபகம். நாங்கள் முதன்முதலில் கற்ற பாடல் ஆத்மா ராமா! ஆனந்த ரமணா!.


நன்றி: @sandepantz, நேயர் விருப்பத்திற்காக பாடியமைக்கு.

இப்பாடலின் மிகச்சமீபத்திய வடிவம்:



இந்த ஒரு பாட்டை மட்டுமே அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாங்கள் 'சாதனை' செய்ததாக ஞாபகம். அக்கம்-பக்கத்தாரெல்லாம் எங்கள் இசையை விரும்பிக் கேட்பதாக நினைத்த நினைவும் கூட. ஒவ்வொரு சனி-ஞாயிறும் காலை 8 மணிக்கு பாட்டு வாத்தியார் வீட்டில் அப்பா கொண்டு விடுவார். தாமதமாக ஆரம்பித்து சரியாக 8:55 ஆனதும் அங்கிருந்து அடுத்த வீட்டுக்குள் நுழைந்து ஸ்ரீ கிருஷ்ணா தொடர் காண சென்று விடுவோம். முதல் நாளில், யாரோ இரு சிறுவர்கள் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி பார்க்கக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் இருந்திருக்க வேண்டும்; பிறகு பழகியிருக்கும். இது தெரிந்து அப்பாவும் பத்து மணிக்கு வந்து அழைத்துச் செல்லத் தொடங்கினார். பாட்டு க்லாஸ் நின்றுபோனதன் காரணம் ஞாபகமில்லை. ஆனால், முதற்பாடலும் 'ஸ்ரீ கிருஷ்ணா' தொடரும் மட்டுமே இப்போது நினைவில். பிறகு, வேறொரு ஊர் சென்று அங்கும் ஒரு 4 வகுப்புகள் மட்டுமே பாட்டு க்லாஸை தொடர முடிந்தது. ஆக, முறையான சங்கீதப் பயிற்சி அன்று நின்றது தான்.

2006-8. தஞ்சையில் என் கல்லூரி நாட்களில், அப்பா மாதம் 2950 மட்டுமே கொடுப்பார். வீட்டு வாடகை தவிர மற்ற எல்லாமே அதற்குள்ளாகத் தான். பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த 'கார்த்திக் ஹோட்ட'லுக்கு, சாப்பாடு விலை ரூ. 45 என்பதையும் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செல்வது வழக்கம். காரணங்கள் இரண்டு:
  1. உருளைக்கிழங்கு பொறியல்.
  2. WorldSpace Satellite Radio
மதியம் சுமார் 12 மணி முதல் 3 மணிக்குள் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி ஒன்று வரும். பல இசை மேதைகள் பாடிக் கேட்ட ஞாபகம். அவரில் ஒருவர் தான் திருமதி. அருணா சாய்ராம். அவர் பாடி நான் முதலில் கேட்டது 'காவடிச் சிந்து' தொகுப்பில் உள்ள 'வள்ளிக் கணவன் பேரை'. செஞ்சுருட்டி ராகம் என்று அவர் சொன்னது தான் இன்று வரை தெரியும்.

சமீபத்தில் தான் இவரது "மாடு மேய்க்கும் கண்ணே" பாடல் கேட்க முடிந்தது. இதுவரை சுமார் 20 முறை கேட்டிருப்பேன். இதோ.


சரி, கழுத கேட்டா குட்டிச்சுவரு. வழக்கம்போல மூளை சும்மா இல்லாம, இதோ, இதனுடைய Youth version.


உன்னைக் கண்டேன் பெண்ணே

உன்னைக் கண்டேன் பெண்ணே
எனைக் காணவில்லை பின்னே!

காலேஜுக்கு கூட வறேன்
பஸ்ஸுல உன் கூட வறேன் (2)
படியில தொங்கி வறேன்
பாக்காமலே போக வேண்டாம்! ( உன்னைக் கண்டேன் )

    காலேஜுக்கு வரவும் வேண்டாம்
    பஸ்ஸுல நீ வரவும் வேண்டாம் (2)
    படிக்கிற பொண்ண நீயும்
    தொந்தரவும் செஞ்சிடாதே!

    அப்பா கிட்ட சொன்னேன்
    உன்ன வெளுத்திடுவார் பின்னே! (2)

பஸ் ஸ்டாப்பில் எப்பவுமே
காலிப் பய கூட்டம் உண்டு (2)
பைக்குல வா என் கண்ணே
பத்திரமா கொண்டு விடறேன் ( உன்னைக் கண்டேன் பெண்ணே )


    காளிப் பசங்களெல்லாம்
    என்னைக் கண்டால் ஓடிடுவான் (2)
    எவனாவது வம்பிழுத்தா
    செவிளிலையெ அரஞ்சிடுவேன் ( அப்பா கிட்ட சொன்னேன் )

கொலகாரன் கொள்ளக்காரன்
இப்பல்லாம் ரொம்ப அதிகம் (2)
உனக்கேதும் ஆச்சுதுன்னா
அலறிடுவேன் கண்மணியே! ( உன்னைக் கண்டேன் பெண்ணே )

    ஃரெண்ட்ஸ் எல்லாம் கூட நிற்க
    பயம் கொஞ்சம் கூட இல்ல (2)
    'கராத்தே' பழகிருக்கேன்
    கருப்பு பெல்ட்-டும் வாங்கிருக்கேன்! ( அப்பா கிட்ட சொன்னேன் )

உன்னுடைய மாமியாரோ
பொண்ணு எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடி?
என்னுடைய காதலியே! ( உன்னைக் கண்டேன் )

    சம்பந்தியைக் கேட்டதுமே
    சம்மதத்தைச் சொல்லுகிறேன் (2)
    நல்ல நாள் பார்த்துவிட்டு
    வீடு வரச் சொல்லுகிறேன்! ( அப்பா கிட்ட சொன்னேன் )



"நல்ல வேள! இவன் சங்கீதம் கத்துக்கல!"-ன்னு தோணுமே?
தெரியும். உங்க mind-voice-அ நா catch பண்ணிட்டேன்!

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Day 3 - 16th Dec. 2012

Day 2 - 16th Dec. 2012 - I